வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (20:58 IST)

குற்றவாளியை பிடிக்க கண்டம் விட்டு கண்டம் பாயும் பெண் சிங்கம்

கேரளாவில் குழந்தையை கற்பழித்து விட்டு நாட்டை விட்டு ஓடிய குற்றவாளியை பிடிக்க சவுதி அரேபியாவிற்கே சென்றுள்ளார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர்.

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். சவுதி அரேபியாவில் கட்டிட வேலையில் பணிபுரியும் இவர் சில வருடங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது நண்பர் ஒருவர் தனது தம்பியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பிறகு இருவரும் நல்ல நட்போடு பழகியதில் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் சுனில் குமார். அவரது 13 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் கொடுமை செய்துள்ளார்.

சின்ன பெண் என்பதால் பயந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாள் அந்த சிறுமி. இந்த கொடுமை அந்த சிறுமிக்கு 3 மாதங்களாக நடந்துள்ளது. ஒருகட்டத்தில் இதை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி சொல்லிவிட்டாள். அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதை தெரிந்து கொண்ட சுனில் குமார் நாட்டை விட்டு தப்பி துபாய்க்கு ஓடிவிட்டார். தீவிர மன அழுத்தத்தில் இருந்த அந்த சிறுமி சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். சுனில் குமாரை அறிமுகப்படுத்திய சிறுமியின் பெரியப்பாவும் குற்றவுணர்ச்சி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பிறகு அந்த ஆவணங்கள் அலமாரியில் தூசிப்படிந்து கிடந்தது.

சமீபத்தில் கொல்லம் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற மெரின் ஜோசப் என்ற பெண் இந்த வழக்கின் ஆவணங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என எண்ணிய அவர், இண்டர்போலை தொடர்பு கொண்டு குற்றவாளியை கைது செய்து தருமாரு கேட்டுக்கொண்டார். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனால் களத்தில் குதித்த மெரின் தானே அந்த குற்றவாளியை கையோடு பிடித்துவர சவுதிக்கு கிளம்பி சென்றுள்ளார். சிங்கம் படத்தில் வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை என்ற வசனம் இன்று பெண் அதிகாரி மெரின் ஜோசப்புக்கு பொருந்தி போயிருக்கிறது.