1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (19:37 IST)

காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் பிரமுகர் ஆதரவு

காஷ்மீரில் 370 ஆவது சிறப்புப்பிரிவை மத்திய அரசு நேற்று ரத்து செய்த நிலையில் இன்று அது குறித்த மசோதா மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை பெரும்பாலான அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக, மதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இருப்பினும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் காஷ்மீர் குறித்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் இந்த முடிவை எடுத்த விதம் குறித்து மட்டுமே விமர்சனம் செய்து வருகிறது. எனவே காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் மறைமுக ஆதரவு தருகின்றதோ என்ற ஐயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மத்திய அரசு காஷ்மீர் தொடர்பாக எடுத்த முடிவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிராதித்யா சிந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேச நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளை ஆதரிக்கிறேன் என்றும், அதே நேரத்தில் அரசியல் சாசன நடைமுறையை பின்பற்றி இருந்தால் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மத்திய அரசின் காஷ்மீர் விவகாரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது அக்கட்சி தலைவர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது