வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (10:11 IST)

இந்தியாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து.. 3 பெட்டிகள் கவிழ்ந்ததால் பரபரப்பு..!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சரக்கு ரயில்களும் பயணிகள் ரயில்களும் விபத்துக்குள்ளாகி, பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று சரக்கு ரயில் ஒன்று மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீரென மூன்று பெட்டிகள் கவிழ்ந்ததாக மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

டெல்லி-மும்பை வழித்தடத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் இருந்து போபாலுக்கு அருகே உள்ள பகானியா ரயில் நிலையத்தை நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் இருந்து மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதாகவும், இப்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகின்றது. தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டதாகவும், இரண்டு பெட்டிகளை மீட்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக எந்த ரயில்களும் ரத்து செய்யப்படவில்லை, சில ரயில்கள் மட்டும் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்குமா என்பதற்கான விசாரணை தொடர்ந்து வருகிறது.

Edited by Mahendran