வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (17:32 IST)

வாட்ஸ் ஆப் செயலியை மோடி அரசு முடக்கப்போவதாக கூறியதா?? உண்மை பின்னணி என்ன?

வாட்ஸ் ஆப் செயலியை மோடி அரசு முடக்கப்போவதாக வாட்ஸ் ஆப்-ல் பரவிய செய்தியின் உண்மை பின்னணி என்ன?

இனி தினமும் இரவு 11.30 மணியிலிருந்து காலை 6.00 மணி வரை வாட்ஸ் ஆப் செயலி செயல்படாது என மோடி அரசு அறிவித்திருந்ததாக வாட்ஸ் ஆப்-ல் ஒரு செய்தி பரவி வந்தது. மேலும் அந்த செய்தியில் “இந்த குறுஞ்செய்தியை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு ஷேர் செய்யவில்லை என்றால், 48 மணி நேரத்தில் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் நீக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்டை திரும்ப பெற வேண்டும் என்றால், ரூ.499 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பிறகு அந்த குறுஞ்செய்தியை பத்து பேருக்கு ஃபார்வேர்ட் செய்தால், அந்த மெசேஜ்கள் ப்ளூ டிக் பெற்று, மீண்டும் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் செயல்படும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த தகவல் பொய்யான தகவல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய தகவலை ஆராய்ந்தபோது, கடந்த 2013 ஆம் ஆண்டும் இதே போல் ஒரு செய்தி உலா வந்துள்ளது என தெரியவந்தது.

அதில் வாட்ஸ் ஆப்-ன் சி.இ.ஓ விடமிருந்து இந்த தகவல் வருகிறது. வாட்ஸ் ஆப் பயன்பாடு அதிகமாகிப் போனதால், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இந்த குறுஞ்செய்தியை அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், உங்கள் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் நீக்கப்படும். அந்த அக்கவுண்டை திரும்ப பெற 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு, இதே போல் “ இந்த குறுஞ்செய்தியை அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்யவில்லை என்றால் அக்கவுண்ட் நீக்கப்படும் எனவும், அதனை திரும்ப பெற கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப்-ல் பரவின என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், கடந்த ஜூலை 03 ஆம் தேதி ஃபேஸ்புக் செயலி சிறிது நேரம் முடங்கியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், வெகு சீக்கிரத்தில் சரி செய்யப்படும் என பகிர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாட்ஸ் ஆப் முடக்க வதந்தியும் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.