1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:31 IST)

பருவநிலை மாற்றம் - இமயமலைக்கு பெரும் அச்சுறுத்தல்: 165 கோடி மக்களுக்கு பாதிப்பு

இந்து குஷ் மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ள பனிமலைகளுக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு உடனடியாக நிறுத்தப்படவில்லையினில் இந்த பெரும் மலைகளில் மூன்றில் இரண்டு பங்கு பனி மலைகள் காணாமல் போகக்கூடும்.
 
உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் கட்டுக்குள் வைத்தாலும் கூட குறைந்தது ஒரு பங்கு மலை பகுதிகள் இருக்காது என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
பனிமலைகள் தான் இப்பகுதியில் உள்ள எட்டு நாடுகளில் வசிக்கும் 250 மில்லியன் மக்களுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன.
 
துருவப்பகுதிகளை தவிர உலகத்தில் அதிகப்படியான பனிக்கட்டிகள் கிடைப்பது இமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள கே2 மற்றும் எவரெஸ்ட் மலை சிகரப்பகுதிகளில்தான்.
 
ஆனால் இந்த பனி மலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும். ஏனெனில் உலகம் முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
புவி வெப்பமயமாதல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக அடுத்த சில தசாப்தங்களிலேயே பனி மலைகள் உருகத்தொடங்கும்.
 
இந்தோ கேஞ்செட்டிங் பிராந்தியத்தில் அதாவது கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து கங்கை பிராந்தியம் உட்பட கிழக்கில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரையிலான பெரும் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது உலகில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள பிராந்தியங்களில் ஒன்று.
 
இந்த மோசமான காற்று காரணமாக பனி மலைகளின் நிலை மேலும் மோசமடையும். கருமை நிற கார்பன் மற்றும் தூசிகள் பனியின் மேல் படர்வதால் பனிக்கட்டிகள் உருகுவது துரிதமாகிறது.
 
உலக வெப்பநிலையானது இரண்டு டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு அதிகரிக்கும் எனில் 2100-ல் பனி மலைகளில் பாதி இருக்காது. உலகம் உடனடியாக சுதாரித்து அதிசயிக்கத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெப்பநிலை உயர்வை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் குறைத்தாலும் கூட பனிமலைகளில் 36% காணாமல் போய்விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
 
பருவ நிலை மாற்றத்தின் இவ்விளைவு இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஒன்று என்கிறார் இந்த ஆய்வை வழிநடத்திய பிலிப்பஸ் வெஸ்டெர்.
 
ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
 
'பெரும் பாதிப்புக்குளாக்கப்போகும் மலை பிராந்தியங்களாக உள்ள இந்த மண்டலங்களில் வாழும் மக்கள் ஏற்கனவே பருவ நிலை மாற்றத்த்தின் விளைவுகளை சந்திக்கத் தொடங்கிவிட்டனர். மோசமான காற்று மாசுபாடு மற்றும் அதிகரிக்கும் அதீத வானிலை நிகழ்வுகளால் பாதிப்புக்குளாகியுள்ளனர்.
 
இமயமலை உச்சியில் உள்ள கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரம்
 
எதிர்காலத்தில் பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் குறைவது மற்றும் பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நகரப்பகுதிகளில் உள்ள தண்ணீர் அமைப்புகளும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். இதனால் உணவு உற்பத்தியும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்'' என பிலிப்பஸ் தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3500 கி.மீ பகுதி கேள்விக்குறியாகும் பிராந்தியமாக உள்ளது.
 
இமயமலை மற்றும் இந்து குஷ் மலை பகுதிகளில் உள்ள பனிமலைகள் தான் உலகின் முக்கியமான 10 நதிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
 
கங்கை நதி, சிந்து நதி, மஞ்சள் நதி, மேகொங் நதி, ஐராவதி உள்ளிட்டவை அதில் முக்கியமான ஆறுகள். இந்த ஆறுகள் பாதிக்கப்படுவதால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு, ஆற்றல், சுத்தமான காற்று மற்றும் வருமானம் உள்ளிட்டவற்றில் பாதிப்புகளை சந்திப்பர்.
 
பனி மலைகள் உருகும் நிகழ்வால் ஏற்படும் விளைவில் பாதிக்கப்படுபவர்கள் தொடர்புடைய மலை பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமல்ல நதியையொட்டிய பகுதிகளில் வாழும் 1.65 பில்லியன் மக்களும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படுவர் மேலும் விவாசாய நிலங்களும் அழிவுறும் என விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர்.
 
'இந்த பிராந்தியங்கள் பனி மலைகள் உருகுவதால் உண்டாகும் நீரையே நம்பியிருக்கிறேன பனி மலைகள் உருகி வெறும் பாறையானால் அதன் பின்னர் நீர் எங்கிருந்து வரும்? பருவ மழை பொய்த்து போகும்போது அங்கு என்ன நிலை ஏற்படும்? என்ன விதமான வறட்சி ஏற்படும்? இந்த பிராந்தியத்தில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்ணீர் தான் பிரதான விவாத பொருளாக இருக்கிறது. ஒருவேளை கடும் வறட்சி ஏற்பட்டால் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மண்டலம் மிக பயங்கரமான அதிர்ச்சியைச் சந்திக்கும். இந்த அறிக்கையை நாம் இந்த அதிர்ச்சிகளை தயாராக வேண்டியதற்கான எச்சரிக்கை மணியாக பார்க்கிறேன்'' என்கிறார் பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வின் மருத்துவர் ஹமிஷ் பிரிட்சார்ட்..