வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (19:49 IST)

தருண் விஜய் பற்றி பாஜக தரப்பில் காரசார விவாதங்கள்

பாஜக மூத்த தலைவர் தருண் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் ட்வீட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனது ட்விட்டர் பக்கத்தை தவறாக பயன்படுத்திய நபரை நீக்கி விட்டதாக தருண் விஜய் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ம் தேதியன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றார். அன்றிரவு அங்குள்ள ‘வூட்டு’ ஹோட்டலில் ராகுல் நண்பர்களுடன் சாப்பிட்டார். அவர் என்ன சாப்பிட்டார் என்பது பற்றி உள்ளூர் பத்திரிகை ஒன்று அந்த ஹோட்டலின் உணவு பரிமாறும் ஊழியரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது.
 
ராகுல் அசைவ உணவு வகைகளையும் சிக்கன் சூப்பும் சாப்பிட்டார் என்று அந்த ஊழியர் தெரிவித்தது பத்திரிகையில் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து நேற்று தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டனர்.
 
பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் ட்விட்டர் பக்கங்களிலும் இதுதொடர்பாக பதிவிடப்பட்டது. ஆனால் ராகுல் காந்தியை விமர்சிக்காமல் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்யப்பட்டு இருந்தது.
 
அதில் ‘‘ஒருவர் ஆன்மீக பயணம் மேற்கொள்வது அவருக்கும், சிவனுக்கும் இடையிலானது. இதை பற்றி மற்றவர்கள் கருத்து சொல்லத் தேவையில்லை. ராகுல் காந்தியின் கைலாஷ் பயணத்தை பற்றி விமர்சிப்பது தவறானது. ஒரு இந்து அவ்வாறு செய்யக்கூடாது.
 
இந்த யாத்திரை அவருக்கும், சிவனுக்கும் இடையிலானது. சிவனை விட பெரியவர்கள் யாருமில்லை’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தருண் விஜய் ட்விட்டர் பதிவை பார்த்த மற்ற பாஜக நிர்வாகிகள் அதிர்ந்து போயினர். 
 
தருண் விஜய் ஏன் காங்கிரஸூக்கு ஆதரவாக பதிவிடுகிறார் என புரியாமல் விழித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மேலும் சில பதிவுகள் அடுத்தடுத்து வந்தன.
 
அதில் ராகுல் காந்திக்கு ஆதரவாக மட்டுமின்றி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் பதிவிடப்பட்டு இருந்தது. அதில் ‘‘ராகுல் காந்தியை விமர்சிப்பவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். பிரதமர் மோடி, ஆணவம் பிடித்த அவர்களின் செயலை உலகம் அறிந்தே இருக்கிறது’’ என தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தருண் விஜய் ட்விட்டர் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘‘நான் வீடு மாறுகிறேன். இந்த சூழ்நிலையை பயன்படுத்த தவறான நபர் எனது பாஸ்வேர்டை திருடி தவறாக பயன்படுத்தி, எனது பெயரில் போலியான ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.
 
பின்னர் மேலும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எனது ட்விட்டர் கணக்கை கையாள்வதற்கு நியமித்து இருந்த நபரை நீக்கி விட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.