1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)

தஞ்சாவூர் தொகுதியின் த மா க வேட்பாளர் யார் ? – இன்று அறிவிக்கிறார் ஜி கே வாசன் !

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள ஜிகே வாசன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிக்கிறார்.

தமிழகக் காங்கிரஸில் இருந்து பிரிந்த மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்றக் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த கட்சியாக மாறிக்கொண்டிருந்த த.மா.க. மூப்பனாரின் இறப்பிற்குப் பின் மெல்ல தேய ஆரம்பித்தது. அதன் பின் அவரது மகன் ஜிகே வாசன் அக்கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். இடையில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.க-ஐ ஆரம்பித்தார்.

ஆனால் தேர்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தமாக என்றொரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் வாசன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற கேள்வி சில நாட்களுக்கு முன் எழுந்தது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் த.மா.க.வைக் கழட்டி விட்டது திமுக. இதனால் அதிமுகக் கூட்டணியில் இணைந்தார் ஜிகே வாசன். அவருக்கு தஞ்சாவூர் தொகுதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த ஒருத் தொகுதியில் நிற்பதற்கான வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்க இருக்கிறார் ஜிகே வாசன். இது தொடர்பாக நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வாசன் ‘அதிமுக கூட்டணி எளிய நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடைவதற்கான, வளர்ச்சிக்கான கூட்டணியாக உள்ளது. வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது நாளை(இன்று) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதிமுக கூட்டணி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளும் வெற்றிக்காக சிறப்பாகப் பாடுபடுவோம்’ எனக் கூறியுள்ளார்.