1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:26 IST)

ஓபிஎஸ் பிரச்சாரம் ரத்து – உடல்நலக்குறைவா ? உதயநிதியா ?

துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று தென் சென்னையில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளது. தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் சூடுபிடித்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கு இடையில் வெற்றி பெறுவதில் கடுமையானப் போட்டி நிலவுகிறது. அதுபோல திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கிடையே கடுமையானப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை திமுக மற்றும் அதிமுக முன்னணித் தலைவர்கள் தீவிரமான தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவின் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மக்களிடம் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தென் சென்னைப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருந்த துணை முதல்வர் திடீரென தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். அதற்குக் காரணம் தொடர் பிரச்சாரங்களால் அவரது உடல்நிலை நலிவுற்றிருப்பதே எனக் கூறப்பட்டது.

ஆனால் பிரச்சார ரத்துக்குப் பின்னணியில் வேறொருக் காரணமும் சொல்லப்படுகிறது. நேற்று ஓபிஎஸ் திட்டமிட்டிருந்த பகுதிகளில் திமுகவின் வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் வாக்கு சேகரித்தார். இதனால் அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எங்காவது சந்தித்துக்கொள்ள நேர்ந்தால் மக்கள் கூட்டத்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படலாம் என்பதாலேயே இந்த தீடீர் ரத்து எனக் கூறப்படுகிறது. முன்னரே ஓபிஎஸ் பிரச்சாரப் பகுதிகளின் விவரங்களைக் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்த பின்னரும் அதே நாளில் உதயநிதி பிரச்சாரத்துக்கும் அனுமதி கொடுத்தது ஏன் என ஆளும்கட்சி சார்பில் இருந்து காவல்துறைக்குக் கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.