1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:59 IST)

அரசியல் என்பது சாக்கடைதான்..! திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன் கொ.ம.தே.க மாநாட்டில் பேச்சு!

Kongu Makkal Desiya Katchi
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி நேற்று பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியுள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த தேர்தலில் பெரும்பான்மை எம்.பி சீட்டுகளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வென்ற நிலையில் இந்த முறையும் நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்ற முன் தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து பேசி வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்கும் முன்னர் பெரிய அளவில் மாநாடுகளையும் நடத்தி வருகின்றன. முன்னதாக திருச்சியில் வி.சி.க தனது மாநாட்டை நடத்தியது. நேற்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பிரம்மாண்ட மாநாடு ஈரோடு விஜயமங்கலம் டோல்கேட் அருகே நடைபெற்றது.


அதில் கோ.ம.தே.க பொதுசெயலாளர் ஈஸ்வரன் பேசும்போது “16 ஆண்டுகளாக வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாமல் கொங்கு மண்ணிற்காக உழைத்து வருகிறோம். பாஜகவில் 4 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். இந்த மண்ணிற்கு என்ன செய்தார்கள்? இது கலாச்சாரத்தை பாதுகாக்கிற மாநாடு” என்று பேசியுள்ளார்.

மேலும் “இன்று அரசியல் என்பது சாக்கடைதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. சாக்கடை நாற்றம் அடிக்கும் என்பதால் போகாமல் இருக்க முடியாது. அரசியலில் தூய்மையாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். தேர்தல், கூட்டணி குறித்த முடிவுகள் அந்தந்த நேரத்தில் கட்சி தலைமையில் உள்ளவர்கள் பேசி முடிவு செய்வார்கள்” என பேசியுள்ளார்.

திமுகவுடன் கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் தொகுதி பங்கீடு ஆலோசனையில் கொங்கு மக்கள் தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு பிப்ரவரி 12ம் தேதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K