1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:18 IST)

ரிஷப் பண்ட் அடித்த பந்து தாக்கியதில் கேமராமேன் காயம்! – ரிஷப் பண்ட் செய்த நெகிழ்ச்சி செயல்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் சிக்ஸர் அடித்தபோது அது மைதானத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமராமேனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



நேற்று ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் அணியின் கேப்டனான ரிஷப் பண் 43 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடித்து 88 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் 2,6,4,6,6,6 என 30 ரன்களை குவித்தார்.


இவ்வாறாக ரிஷப் பண்ட் சிக்ஸர் மழை பொழிந்தபோது சிக்ஸரில் வந்த பந்து ஒன்று மைதானத்தில் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன் தேபாசிஷ் என்பவரை தாக்கியது. இதனால் காயம்பட்ட அவர் முதலுதவிக்காக அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் போட்டியில் வென்றபிறகு தேபாசிஷ்க்கு மன்னிப்பு கேட்டு வீடியோவில் பேசியுள்ளார் ரிஷப் பண்ட். அதில் அவர் “மன்னிக்கவும் தேபாசிஷ் பாய். உங்களை நோக்கி வேண்டுமென்றே அடிக்கவில்லை. நீங்கள் விரைவாக குணமடைவீர்கள் என்று நினைக்கிறேன். அதற்காக குட் லக்” என்று கூறியுள்ளார். போட்டியை வென்றாலும் காயம்பட்டவரை மறக்காமல் மன்னிப்பு கேட்ட ரிசப் பண்டின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Edit by Prasanth.K