1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (15:37 IST)

’ஆறுச்சாமி’ ஷிவம் துபேவை இந்தியா டீமில் எடுப்பது சிரமம்! – ஏபி டி வில்லியர்ஸ் சொன்ன காரணம் இதுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபேவை உலகக்கோப்பை டி20க்கு இந்திய அணியில் எடுப்பார்களா என்ற கேள்விக்கு ஏபி டி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.



பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் பல வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஐபிஎல்க்கு பிறகு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 போட்டியில் இடம்பெற ஐபிஎல்லின் சிறப்பான ஆட்டம் உதவும் என்பதால் பலரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே.

சிக்ஸர்களாக அடித்து தள்ளும் ஷிவம் துபேவை ‘ஆறுச்சாமி’ என்றே ரசிகர்கள் அழைத்து வரும் நிலையில் உலகக்கோப்பையில் துபே இடம்பெற வேண்டும் என்று இப்போதே கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் பேசி வருகின்றனர்.


இந்நிலையில் ஷிவம் துபேவின் திறமை குறித்து பேசிய கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் “ஆர்சிபி அணியிலிருந்து வெளியே வந்த ஷிவம் துபே பல தூரத்தை கடந்து வந்துள்ளார். சிஎஸ்கேவில் அவர் ஒரு சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மைதானத்திற்கு சென்றால் எதை பற்றியும் யோசிக்காமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அடித்து விளையாடுகிறார்.

ஷிவம் துபே உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பெறும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு நிறைய போட்டியும் உள்ளது. பவர் ஹிட்டரான அவர் அற்புதமான ப்ளேயர்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பெயர்களுடன் ஷிவம் துபே பெயரும் உலகக்கோப்பை அணி பரிந்துரையில் இருந்து வருகிறது.

Edit by Prasanth.K