1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:30 IST)

பவுலிங்கில் அரைசதம் அடித்த நான்கு ஆர் சி பி பவுலர்கள்… தாராள பிரபுக்களாக மாறி அள்ளிக் கொடுத்த சோகம்!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி டி 20 வரலாற்றின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி பவர்ப்ளேவிலேயே சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த தவறியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசன் 67 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் 287 என்ற புதிய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை சன்ரைசர்ஸ் படைத்தது. டி 20 வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சேஸிங்கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய சூழல். பவர்ப்ளே முடியும்போது 80 ரன்களை ஆர்சிபி நெருங்கியிருந்தபோது விராட்கோலி 42 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் டூ ப்ளெசிஸ் நின்று விளையாடி 28 பந்துகளுக்கு 62 ரன்கள் வரை வந்தவர் அதிர்ச்சிகரமாக விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்து வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று 35 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் ஆர் சி பி பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரிவாரி வழங்கினர். அந்த அணியின் முக்கிய பவுலர்களான ரீஸ் டோப்ளி, யாஷ் தயால், லூக்கூ பெர்குஸன் மற்றும் வைசாக் விஜயகுமார் ஆகிய நான்கு பேருமே 4 ஓவர்கள் வீசி 50 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். இவர்கள் வாரி வாரி வழங்கியதால் பேட்ஸ்மேன்கள் எந்தளவுக்கு அதிரடியாக ஆடினாலும் இலக்கை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.