வருகிறது ரவுடி ரத்தோர் 2 - அதிரடிக்கு பிரபுதேவா தயார்
ரவுடி ரத்தோர் 2012இல் வெளியானது. அது வெளியான போது அக்ஷய் குமாரின் மார்க்கெட் அதல பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமெல்லாம் அட்டர் பிளாப்பாகி அக்ஷயின் திரை வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்த நேரம்.
2012 ஏப்ரலில் ஹவுஸ்ஃபுல் 2 வெளியானது. படம் 100 கோடி சம்பாதித்தாலும் அது அக்ஷய் குமார் மட்டும் நடித்த படமல்ல. ஜான் ஆபிரஹாம், ரிஷி கபூர் என பலர் நடித்திருந்தனர். அதையடுத்து ஜூனில் ரவுடி ரத்தோர் வெளியானது. அக்ஷய் தனி ஹீரோவாக நடித்த அப்படம் 11 தினங்களில் 100 கோடியை கடந்தது. இந்தியாவில் மட்டும் அதன் திரையரங்கு வசூல் 133 கோடிகள்.
ரவுடி ரத்தோர் தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய விக்ரமார்க்குடு படத்தின் தழுவல் (அதன் தமிழ் தழுவல் சிறுத்தை). அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது என ரவுடி ரத்தோரை தயாரித்த சஞ்சய் லீலா பன்சாலி முடிவு செய்துள்ளார்.
சென்ற வாரம்தான் இந்த சீக்வெல் குறித்து முடிவானது. அக்ஷய், சோனாக்ஷி என அதே நடிகர்கள். இயக்கம்... வேறு யார் பிரபுதேவாதான். தற்போது இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வருடம் சீக்வெல் டேக் ஆஃப் ஆகும்.