வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (20:53 IST)

வட-தென் கொரியா பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வெளியேறும் வடகொரியா

வடகொரியா-தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதற்காக கெசொங் என்ற இடத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தொடர்பு அலுவலகத்தில் இருந்து வட கொரியாவின் பிரதிநிதிகள் வெளியேறியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு, வடகொரியாவின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை விட்டு சென்றுவிடுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது.
 
இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள தென்கொரியா, வெளியேறிய வடகொரிய ஊழியர்கள் விரைவில் திரும்பி வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
கடந்த மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நிகழ்ந்த அமெரிக்க, வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான உச்சி மாநாடு தோல்வியடைந்ததை தொடர்ந்தே வட கொரியா இந்த முடிவினை எடுத்துள்ளது.
 
வட கொரியாவின் எல்லையில் அமைந்துள்ள கெசொங்கில் அமைந்துள்ள இந்த தொடர்பு அலுவலகம், கொரிய போருக்கு பின்னர் முதல் முறையாக வடகொரிய மற்றும் தென்கொரிய அதிகாரிகள் அடிக்கடி தொடர்பு கொள்ள ஏதுவாக இருந்தது.
 
இந்த அலுவலகத்தில் இரு தரப்பிலிருந்தும் தலா 20 பேர் ஊழியர்களாக இருக்கின்றனர்.
 
2018ம் ஆண்டு இந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது, இரு கொரியாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
 
ஃபேக்ஸ் அல்லது சிறப்பு தொலைபேசி இணைப்புகளால் இந்த அலுவலகம் மூலம் இருதரப்புகளும் தொடர்பு கொள்ளுகின்றன. ஆனால், தங்களின் உறவுகளில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்படும்.
 
எந்த பிரச்சனை பற்றியும் 24 மணிநேரமும், 365 நாட்களும் நேரடியாக கலந்துரையாடுவது அனுமதிக்கப்படும் என்று தென்கொரிய ஐக்கிய துறை அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
 
வடகொரியா இவ்வாறு ஊழியர்களை வெளியேற்றியிருப்பது தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னுக்கு பெரியதொரு பின்னடைவு என்று தலைநகர் சோலிலுள்ள பிபிசி செய்தியாளர் லௌரா பிக்கர் கூறியுள்ளார்.
 
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் கொண்டுள்ள ராஜீய உறவு, வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருக்கும் எந்தவொரு பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவுக்கு மேம்பட்டுள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் நம்பியிருந்தார். ஆனால், வடகொரியா அதே மாதிரி உணரவில்லை என்று தோன்றுவதாக அவர் கூறுகிறார்.
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் பொது நபராக (மத்தியஸ்தராக) செயல்படுவதாக தென்கொரியா எண்ணுகிறது.
 
தென் கொரியா நன்றாக இப்போது செயல்படாததால், கெசொங் தொடர்பு அலுவலகத்தில் தங்களின் ஊழியர்கள் இருப்பதை கூட வடகொரியா விரும்பவில்லை என்பதே உண்மை என்கிறார் லௌரா பிக்கர்.
 
வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெற்ற உச்சி மாநாடு தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கக்கூடும் என்று கடந்த மாதம் வடகொரியா எச்சரித்திருக்கிறது,
 
இந்த உச்சி மாநாட்டில் கிடைத்த பொன்னான வாய்ப்பை அமெரிக்கா விட்டுவிட்டது என்று வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன்-குய் இந்த மாத தொடக்கத்தில கூறினார்.
 
வடகொரியா மீதான எல்லா தடைகளையும் நீக்க வேண்டுமென உச்சி மாநாட்டில் கிம் ஜாங்-உன் கோரியதை அமெரிக்காவால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
 
அமெரிக்கா-வடகொரியா பேச்சுவார்த்தை: இனி என்ன நடக்கும்?
அமெரிக்காவின் பரம எதிரியாக இருந்த வியட்நாமில் டிரம்ப் – கிம் சந்திப்பது ஏன்?
ஆனால் முக்கியமான ஐந்து பொருளாதார தடைகளை நீக்கவே வடகொரியா கோரியது என்று சோ சன்-குய் தெரிவித்தார்.
 
ஆனால், இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ராஜீய முயற்சிகள் இன்னும் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
 
,