வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:05 IST)

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தடுப்பரண்களை உடைத்து கிளம்பியது 30 கிமீ நீள அணிவகுப்பு!

குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக்க் கொண்டு டெல்லிக்குள் நுழைந்தன.
 
ஒரு எல்லையில் பேரணியின் நீளம் 30 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் என்பதாக விவசாயிகளை மேற்கோள் காட்டி சொல்கிறார் பிபிசி செய்தியாளர்.
 
இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் இந்தியத் தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
 
முதலில் இந்தப் பேரணியைத் தவிர்க்க நினைத்தது அரசு. ஆனால், சில நாள்களுக்கு முன்பு டெல்லி போலீசார் இந்தப் பேரணிக்கு அனுமதி அளித்தனர். எனினும், டெல்லி குடியரசு தின அணி வகுப்பு முடிந்த பிறகு 10 மணிக்கு மேல்தான் இந்தப் பேரணி தொடங்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர்.
 
சிங்கு, டிக்ரி உள்ளிட்ட விவசாயப் போராட்டங்கள் பெருமளவில் நடக்கும் எல்லைப் பகுதிகளில் இருந்துதான் இந்த டிராக்டர்கள் டெல்லிக்குள் வரவேண்டும். ஆனால், இந்த எல்லைப் பகுதிகளில் போலீசார் பெரிய தடுப்பரண்களை உருவாக்கி வைத்தனர்.
 
சாலையின் நடுவில் வைக்கும் காங்கிரீட் பிளாக்குகளையும், மண் ஏற்றிய டாராஸ் போன்ற லாரிகளையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தனர்.
 
"ஜேசிபி போன்ற மண் வாரி இயந்திரங்களும், பல வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டன" என்கிறார் டிக்ரி எல்லையில் இருக்கும் பிபிசி ஹிந்தி சேவையின் பகுதி நேர செய்தியாளர் சமீராத்மஜ் மிஸ்ரா.
 
கிரேன்கள் உதவியோடு தடுப்பரண்கள் உருவாக்கப்பட்டன.
 
சாலைகளில் பயன்படுத்தும் பேரிகேடுகளும் தடுப்பரண்களில் பயன்படுத்தப்பட்டன.
 
தடுப்பரண்கள் உடைத்துக் கிளம்பிய பேரணி ஆனால், குறிப்பிடப்பட்ட காலை 10 மணிக்கு முன்னதாகவே விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு தங்கள் டிராக்டர்களோடு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.
 
விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி டெல்லியின் தான்சா எல்லைப் பகுதியில் தொடங்கியது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
 
டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர்.
 
30 கிலோ மீட்டருக்கு மேல் நீளும் பேரணி
டிக்ரி எல்லைப் பகுதியில் இருக்கும் பிபிசி இந்தி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா அந்த இடத்தை பேரணி கடக்கத் தொடங்கி அரை மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது என்கிறார். இந்தப் பேரணி எவ்வளவு தூரம் நீள்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை என்று கூறும் அவர், விவசாயிகள் அது 30 கிலோ மீட்டருக்கு மேல் நீளமாக இருக்கும் என்று தெரிவித்ததாகக் கூறுகிறார்.
 
சாலையின் ஒரு பக்கத்தில் டிராக்டர்கள் அணி வகுப்பதாகவும், மறுபக்கத்தில் விவசாயிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
 
இது தவிரவும், டிராக்டர்களில் நிறைய விவசாயிகள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன டிராக்டர் பேரணியில் இருந்து வரும் படங்கள்.
 
அமைதிகாக்க சொல்லும் விவசாய சங்கம்
 
முன்னதாக "இந்தப் பேரணியின்போது விவசாயிகள் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். இது போராட்டத்தின் கடைசி நாளல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். விஷமிகள் ஊடுருவி பேரணிக்கு கெட்ட பேரை ஏற்படுத்தலாம். அதைப்போன்ற சக்திகளை அடையாளம் கண்டு விலக்கி வைக்கவேண்டும். அமைதியைக் கடைபிடிக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் ஏக்தா மஞ்ச் என்ற விவசாயிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
(விவசாயிகள் பேரணி தொடர்பான தொடர்ந்த செய்தி ஓட்டங்களை இதே பக்கத்தில் சேர்த்து வருகிறோம். தொடர்ந்து இந்த செய்தியை பின் தொடர விரும்பும் நேயர்கள் இந்தப் பக்கத்தில் இணைந்திருக்கலாம்)