1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (13:26 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (கன்னி)

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் தன வாக்கு  குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம்  பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: வாய் ஜாலத்தில் மற்றவரை தோற்கடிக்கும் கன்னி ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தொழிலால் நன்மை நடக்கும் என்பதில் ஐயமில்லை.
 
குடும்பத்தில் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
 
தொழிலில் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும், அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல  லாபத்தைக் குரு பகவான் கொடுப்பார். வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு பண விஷயங்கள் சீராகும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க  வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து காணப்படும்.
 
பெண்களின் உடலுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகள் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும். உடனே கவனித்தால் பெரிய பிரச்சனைகளில்  இருந்து தப்பிக்கலாம். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், கேடயங்களும் கிடைக்கப்  பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு மூத்த அரசியல்வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு வழங்குவார்கள்.
 
கலைத்துறையினருக்கு நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம்  அளிப்பது நல்லதல்ல.
 
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் தேவையான அளவு பணம் கிடைக்கும். வழக்கத்தை விட அதிக அலைச்சல் இருக்கும். தந்தை வழி  சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
 
அஸ்தம்: இந்த குரு பெயர்ச்சியில் பதவியொன்று கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும்.
 
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் வேலை பார்ப்பவர்கள் அலுவலகத்தில் புகழ் கூடும். அதனால் மனம் களிப்பில் இருப்பீர்கள்.  குடும்பத்திலும்  உங்கள் கை ஓங்கியே இருக்கும். அதனால் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.
 
பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.