செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (16:27 IST)

ரூ.1000 கோடி மதிப்புடைய ஜாஸ் சினிமாஸ்; விவேக் கையில் எப்படி?? வருமான வரித்துறை குடைச்சல்!!

சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


 
 
180-க்கும் மேற்பட்ட இடங்களில் 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 
 
இந்த சோதனையில் ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை ஆகியனையும் மிஞ்சவில்லை. 
 
இந்நிலையில், இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான வேலச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் பற்றி வருமான வரித்துறையினர் குடைச்சல் கொடுக்க துவங்கியுள்ளனராம். 
 
2015 ஆம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அந்த தியேட்டர்களை ரூ.1000 கோடிக்கு இளவரசியின் மகன் விவேக் விலைக்கு வாங்கினார் என அப்போதே குற்றம் சாட்டப்பட்டது.
 
ஆனால், தியேட்டர்களை விலைக்கு வாங்கவில்லை, 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளதாக பதில் அறிக்கை விடப்பட்டது. 
 
இது மட்டுமின்றி விவேக் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ஜாஸ் சினிமா தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்க ரூ.1000 கோடி பணம் எப்படி வந்தது என விவேக்கிடம் சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டதாம். 
 
லக்ஸ் தியேட்டரில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து ரூ.42.50 கோடி கடன் வாங்கி அந்த தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்ததாக விவேக் கூறியதாக தெரிகிறது. 
 
இதனை ஏற்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஜாஸ் சினிமாஸ் மூலம் கருப்பு பணம் மாற்றப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.