ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:00 IST)

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுக்கு சங்கர்!

முன்னாள் அரசு ஊழியரான சவுக்கு சங்கர் வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் சவுக்கு என்ற இணையதளத்தை தொடங்கி பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்தார். அதன் பின்னர் யுடியூப் சேனல்களில் பரபரப்பான அரசியல் விவாதங்கள் செய்து வந்தார்.

அதில் ஒரு வீடியொவில் பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மேல் வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அடுக்கடுக்காக அவர் மேல் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டம் போடப்பட்டது.

இதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுதலையான சங்கர், தற்போது மீண்டும் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த நாளத்தில் இருந்த அடைப்புக் காரணமாக ஆஞ்ஜியோ ப்ளாஸ்ட் சிகிச்சை மூலமாக ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.