1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2015 (17:40 IST)

அம்பாரையில் ஜனாதிபதி; மக்களிடம் ஒற்றுமை வலியுறுத்தல்

இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் எப்போதும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது அத்தியாவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 
சனிக்கிழமை அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் பௌத்த தாது கோபுரமொன்றை திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்
 
"30 வருட யுத்தத்தில் வடக்கு போன்று கிழக்கிலும் அழிவுகள் ஏற்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்தாலும் அதன் தொடக்கத்திற்கான காரணம் என்ன என்பது தெரிந்த விடயம். இந்நிலையில் மீணடுமொரு யத்தத்திற்கு நாடு செல்லாதவாறு இனங்களிடையே மதங்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் வகையில் செயல்படுவோம்.''
 
இளைஞர் கைது
 
இதேவேளை அந்த பிரதேசத்தில் வீதியில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த பௌத்த கொடியை சேதப்படுத்தினார் என்ற குற்றத்தின் பேரில் 25 வயதான உள்ளுர் முஸ்லிம் இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
 
பெளத்த பிக்கு ஒருவரால் பொத்துவில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் குறித்த சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என உறவினர்கள் கூறுகின்றார்கள்.
 
பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவரின் பின்புலத்திலே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரரொருவர் இது தொடர்பாக கூறுகின்றார். ஆனால் பொலிஸ் தரப்பு இதனை மறுக்கின்றது.