வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (17:40 IST)

பிரபாகரன் மரணம் குறித்து கருணா சொல்வதெல்லாம் பொய் - ராணுவ அதிகாரிகள் மறுப்பு!

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா அம்மான் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் பலரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
 

 
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை கருணா அம்மான் அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
 
அதில் குறிப்பிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பான கருணாவின் கூற்றை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார்.
 
குறித்த நேர்காணலில் இந்தியப்படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலைகொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டதாகவும் கருணா அம்மான் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.
 
இது தொடர்பாகவும் தற்போது ராணுவ அதிகாரிகள் கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளனர்.
 
இறுதி யுத்தம் தொடர்பாக கருணா வெளியிடும் தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், இந்தியப் படையினர் ஒருபோதும் வவுனியாவில் நிலைகொண்டிருக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக திவயின பத்திரிகை ராணுவத்தினரை மேற்கோள் காட்டி விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.