அரசு பெண் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்.. ஆந்திர முதல்வர் தகவல்..!
ஆந்திராவில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு " வொர்க் ஃப்ரம் ஹோம்" என்ற திட்டத்தை தொடங்க இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்திலிருந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் " வொர்க் ஃப்ரம் ஹோம்" திட்டத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
முதலில் சில நகரங்களில் மட்டும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பெண்களுக்காக " வொர்க் ஃப்ரம் ஹோம்" திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதன் மூலம் பெண்கள் தங்களது குடும்ப வேலையை செய்து கொள்வதோடு அலுவலக வேலையையும் சிறப்பாக செய்ய முடியும் என்றும் நினைக்கிறேன் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மிகச் சிறந்த திட்டமாக இது அமையும் என்று நம்புவதாகவும், கொரோனா காலத்தில் பெண்கள் உட்பட அனைவருமே வீட்டில் இருந்தே பணியாற்றினார்கள் என்றும், அதேபோன்ற ஒரு நிலையை தான் மீண்டும் பெண்களுக்காக உருவாக்கப் போகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அதே நேரத்தில், இந்த திட்டத்தை தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran