1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (17:10 IST)

இன்னும் சில வாரங்களில் ராகுல் காந்தி பிரதமர்: நாகர்கோவிலில் ஸ்டாலின் முழக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார். இன்று காலையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் உரையாடிய ராகுல்காந்தி அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்ற ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.
 
சற்றுமுன் நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் ஆரம்பித்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். இதனை நான் உறுதியாக சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று அன்றே நான் சொன்னேன். இன்றும் அதே துணிச்சலோடு சொல்கிறேன், ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று முக ஸ்டாலின் பேசினார்.
 
முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதே மேடையில் பேசியபோது, இந்திய அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல்காந்தி ஜொலிப்பதாகவும், மோடியை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், நாட்டில் மதநல்லிணக்கம் காப்பாற்றப்பட ராகுல்காந்தியை ஆதரிக்க வேண்டும் என்றும் வைகோ பேசினார்.