செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2016 (14:17 IST)

மோடியின் அதிரடி ; அமைதி காக்கும் ஓ.பி.எஸ் : பரபரப்பு பின்னணி

தமிழகத்தின் பல முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வருமான வரித்துறையினர் குறி வைத்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஓ.பி.எஸ் மற்றும் அவரின் உறவினர்கள் உட்பட அதிமுக ஐவரணியில் உள்ள சில அமைச்சர்களின் வீட்டில் கார்டன் தரப்பு நடத்திய சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்கள் கிடைத்ததாக அப்போதே தகவல் வெளியானது. அதன் பின் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஐவரணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். 
 
ஆனால், அவர்களிடமிருந்து என்ன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என ஜெ.வின் தரப்பு வெளியில் எதுவும் கூறவில்லை.  இதற்கு பின்னால், சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இருந்தார் என்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றாகவே தெரியும். 
 
தற்போது ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவருக்குரிய மரியாதையை மன்னார்குடி வட்டாரமோ, அதிமுக அமைச்சர்களோ, கலெக்டர்கள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகளோ கொடுக்கவில்லை என்பது அவர் உணர்ந்துள்ளார். 
 
எனவே தான் வர்தா புயலின் போது, அதிகாரிகளுடன் நன்றாக திட்டமிட்டு களத்தில் இறங்கி வேலை பார்த்தார் ஓ.பி.எஸ். புயல் விவகாரத்தில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டது என ஊடகங்களிடம் நற்பெயரும் வாங்கினார் ஓ.பி.எஸ்.  அவர் அப்படி செயல்பட்டது கார்டன் தரப்பு ரசிக்கவில்லையாம். மன்னார்குடி தரப்பினர் அவரிடம் கோபமாக நடந்து கொண்டதாக கூட செய்திகள் வெளியானது.


 

 
எனவே, வர்தா புயல் தாக்கத்தின் விளைவாக, தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி நிவாரணம் வேண்டி, டெல்லி சென்ற ஓ.பி.எஸ் உடன் இருந்தவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மோடியிடம் எல்லாவற்றையும் விளக்கமாக பேசியுள்ளாராம். ‘நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.. மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று கூறி அவரை அனுப்பி வைத்த மோடி, அடுத்த நாளே ராம் மோகன் ராவ் வீட்டிற்கு வருமான வரித்துறையினரை அனுப்பி வைத்தார் எனக் கூறப்படுகிறது.
 
தன்னை பழிவாங்கியவர்களை தற்போது ஓ.பி.எஸ் பழி வாங்க தொடங்கி விட்டார் எனவும், அதன் விளைவே, ராம் மோகன் ராவ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திக் கொண்டிருக்கும் சோதனைகளுக்கு காரணம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
அதனால்தான், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏன்?...அதிகாரிகள் தலைமைச் செயலகம் நுழைந்து சோதனை நடத்திய போது கூட, நடக்கட்டும் என  அவர் அமைதியாகவே இருந்தார் எனக் கூறப்படுகிறது.
 
டெல்லியில் இருந்து திரும்பிய ஓ.பி.எஸ் இதுவரை சசிகலாவை சந்தித்து பேசவில்லை. வருகிற 29ம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில் தனக்கு எதிராக சிலர் குரல் கொடுப்பார்கள் எனத் தெரிந்தும், எந்த கவலையும் இல்லாமல், முதல் அமைச்சர் வேலையை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஓ.பி.எஸ்.
 
பொறுத்திருந்து பார்ப்போம்....