1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (08:05 IST)

மீனவர் பிரச்னைக்கு மோடி ஆட்சியில் சுமுகத் தீர்வு ஏற்படும் - இல.கணேசன்

நரேந்திர மோடி ஆட்சியில் தமிழக மீனவர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 
பொற்றாமரை இலக்கிய அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்பதாக 10 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றிருந்த இல. கணேசன், ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை திரும்பினார்.
 
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் பொதுச் செயலாளர் சங்கரன், செயலாளர் சிவா ஆகியோர் வரவேற்றனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறியதாவது:-
 
“இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்த ஐவர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.
 
நரேந்திர மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும். நமது மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. மக்கள் இடைத்தேர்தல்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளதையே இது காட்டுகிறது.
 
தேர்தல் களத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களே இருக்கக் கூடாது என நினைப்பது ஆரோக்கியமானது அல்ல“ இவ்வாறு இல.கணேசன் கூறினார்.