1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 24 டிசம்பர் 2016 (15:23 IST)

அதிமுகவை ஓ.பன்னீர் செல்வமே வழி நடத்த வேண்டும் - எம்.ஜி.ஆர் உறவினர் கோரிக்கை

எம்.ஜி.ஆருக்கு பின் கட்சியை வழி நடத்திச் சென்ற ஜெயலலிதாவை போல், தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என எம்.ஜி.ஆரின் உறவினர் தெரிவித்துள்ள கருத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இன்று எம்.ஜி.ஆரின் நினைவு தினம். இதனால், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா விஜயகுமார் இன்று குடும்பத்துடன் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அவருக்குபின் ஜெயலலிதா கட்சியை  இத்தனை வருடங்கள் வளர்த்தார்.  தற்போது ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருக்கிறார். அவர் தொடர்ந்து நல்லாட்சி தர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எந்த சிக்கலும் இல்லாமல், கட்சியினர் ஒற்றுமையாக இருந்து அவருக்கு நம்பிக்கை அளிக்கை வேண்டும். 


 

 
யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் ஆகட்டும். ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எப்படி கட்சியை வழிநடத்தி மக்களுக்கு நன்மை செய்தார்களோ அதுபோல் நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை.
 
தற்போது ஓ.பி.எஸ் நன்றாகவே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். புயல் வந்த போது கூட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுத்தார். எனவே அவரே முதல்வராக தொடரவேண்டும்” என்று கூறினர்.
 
கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சசிகலாவை முன்னிறுத்தும் வேலையில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்கும் வேளையில், எம்.ஜி.ஆரின் உறவினர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.