1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (14:06 IST)

முட்டை ஊழல் அம்பலம் ; களத்தில் குதித்த ரசிகர்கள் : அறிவுரை வழங்கிய கமல்ஹாசன்

சத்துணவில் கெட்டுப் போன முட்டைகளை பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது தனது நற்பணி மன்றம் மூலம் தற்போது நிரூபிக்கப்பட்டதன் மூலம் அரசின் ஊழல் அம்பலமாகியுள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


 

 
அரசின் அனைத்து துறைகளில் ஊழல் பெருகி விட்டதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக அமைச்சர்கள் பலர், கமல்ஹாசனுக்கு எதிராக பல கருத்திகளை கூறினர். மேலும், கமல்ஹாசனை ஒருமையிலும் பேசி வந்தனர். அதோடு விடாமல், ஆதாரமில்லாமல் கமல் பேசி வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
 
இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில், குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகளை கலந்து ஊழல் செய்ததை, கமல் ரசிகர் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்து அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். 
 
அதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்  “பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஊழல் நடந்ததற்கான ஆதாரம் எங்கே என அதிமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு தரப்பில் நடைபெற்ற ஊழலை கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் கண்டுபிடித்து, தடுத்து நிறுத்தியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.