1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 4 டிசம்பர் 2014 (17:16 IST)

கவனிப்பாரின்றி அனாதையாக கிடக்கும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட முன்னாள் தமிழ் கதாநாயகி

தமிழ் பட கதாநாயகி நிஷா கவனிப்பாரின்றி அனாதையாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார்.
 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் கவனிப்பாரின்றி பெண் ஒருவர் கிடந்துள்ளார். அவர் மீது ஈ, எறும்புகள் மொய்க்க, எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்துவிட்ட நிலையில் சுமார் ஆறு நாட்கள் கிடந்துள்ளார். அப்போது சிலருக்கும் மட்டும் அடையாளம் தெரிந்துள்ளது. அந்தப் பெண் தான் முன்னாள் தமிழ் சினிமா நடிகை நிஷா நூர்.
 
30 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை நிஷா. நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான். இவர் கல்யாண அகதிகள் என்னும் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகையானார். பின்னர், ‘டிக்..டிக்..டிக்..’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 
மேலும் ‘ஐயர் தி கிரேட்’ என்ற படத்தை தயாரித்தார். பின்னர், முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் இணைந்ததாக தகவல் வந்தது. இவரது குடும்பத்தினர் அனைவரும் அதே பகுதியில் வசதியாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவரைப் பற்றிய செய்திகள், சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களிலும், சில உள்ளூர் செய்திகளிலும் இந்த சோகக் கதை ஒளிபரப்பாகியது. இந்த செய்தி பற்றி அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக (தாமாக முன்வந்து தீர்த்து வைக்க நினைக்கும் பிரச்சனை) கையில் எடுத்துள்ளார்.

 
‘அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன? என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
‘போக்கிடம் இல்லாத, யாருடைய உதவியும் கிடைக்காத ஒரு பெண் போதிய கவனிப்பின்றி பொது வீதியில் உயிருக்கு மோசமான நிலையில் கிடக்கிறார். அவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்ற தகவல் அவருடைய வாழ்வுரிமையை மீறுவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது’ என நீதிபதி முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.