1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (17:20 IST)

நீங்கள் வாரிசு அரசியல் செய்யவில்லையா? – களேபரமான சட்டசபை

சட்டசபை கூட்டத்தில் வாரிசு அரசியல் என அதிமுக உறுப்பினர்கள் குறிப்பிட்டு பேசியதால் திமுக – அதிமுக இடையே மோதல் உருவானது. இது சற்றுநேரத்தில் சட்டப்பேரவையை களேபரமாக்கியது.

சட்டசபை கூட்டத்தில் சட்டத்துறைக்கான மானியங்கள் குறித்து பேசிய அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி “மற்ற கட்சிகளை போல தாத்தா, மகன், பேரன் என வாரிசு அரசியலில் அதிமுக ஈடுபடவில்லை. மாநிலங்களவை தேர்தலில் கூட இஸ்லாமியர், பட்டியல் இனத்தவருக்கு இடங்கள் ஒதுக்கினோம்” என பேசியுள்ளார்.

இவரது இந்த பேச்சு திமுக உறுப்பினர்களை கொந்தளிக்க செய்தது. அடுத்து பேசிய திமுக உறுப்பினர் சக்கரபாணி வார்சு அரசியல் குறித்து அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறினார். அதற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நீக்க முடியாது என கூறினார். இதனால் விவாதம் மேலும் சூடு பிடித்தது.

தொடர்ந்து பேசிய சக்கரபாணி “அவையில் இல்லாத ஒருவரை பற்றி பேசுவது அழகல்ல. மேலும் அதிமுக உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா, ஜெயக்குமார் ஆகியோரின் மகன்கள் அரசியலில் இருக்கிறார்களே. அவர்களெல்லாம் வாரிசு இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுக உறுப்பினர் வாரிசு அரசியல் என்றுதான் குறிப்பிட்டாரே தவிர திமுக என்று எங்கேயும் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டினார். பிறகு பேசிய அவைத்தலைவர் “அதிமுக உறுப்பினர் யாரையும் சுட்டிக்காட்டி அப்படி பேசவில்லை. நீங்களாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம்” என்று கூறி பிரச்சினையை முடித்து வைத்தார்.

இதனால் சில நிமிடங்கள் சட்டசபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.