வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (12:33 IST)

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமின்.. நீதிமன்றம் உத்தரவு..!

Mahavishnu
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைதாப்பேட்டை அரசு பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

"மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை; என் பேச்சு அவர்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் தனது ஜாமீன் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், "என் பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டது; முழு பேச்சை கேட்டுவிடாமல் எனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது," என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 27ஆம் தேதி கூடுதல் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினர் பதில் அளிக்க அவகாசம் கேட்டனர். தற்போது, அக்டோபர் 3ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர, இன்று மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Edited by Mahendran