சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (16:14 IST)

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் கவலைக்கிடம்..! தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..!!

Kallakurichi
கள்ளச்சாராயம் குடித்து நான்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு  வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இவர்களில் சிகிச்சை பலனின்றி  39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 56 பேர், சேலம் மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் இரண்டு பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த 4  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 24 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  ஜிப்மர் மற்றும் சேலம் மருத்துவமனையில் தலா 8- பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 7 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.