செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2017 (11:39 IST)

‘அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கிகளாக உள்ளனர்’ - டி.ராஜேந்தர் ஆக்ரோஷம்

அதிமுக அரசு ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கவில்லை; ஜால்ரா தான் போடுகின்றனர் என்றும் அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர் என்றும் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


 

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்திட வலியுறுத்தி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ”வீரம் நிறைந்த மண்ணில் தமிழர்களின் உணர்வையும் வீரத்தையும் காக்க நடத்தப்படுவது ஜல்லிக்கட்டு. இதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை, தடை என கூறிவருவது எத்தனை நாளைக்கு? இதற்கு முடிவு இல்லையா?

தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அ.தி.மு.க. அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை. ஜால்ரா தான் போடுகின்றனர். அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியிடம் கூறவில்லை. நமஸ்காரம் தான் செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.