1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (15:24 IST)

போலி சிம்கார்டுகள் மூலம் பெண்களுடன் ஆபாச பேச்சு - வாலிபர்கள் கைது

போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு பெற்று, பொதுமக்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் ஆபாசமாக பேசிய வாலிபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


 

 
கரூர் நகர காவல் உட்கோட்டத்தில் போலி ஆவணங்கள் கொண்டு சிம்கார்டுகளை விற்பனை செய்ததோடு, அந்த சிம்கார்டுகளின் மூலமாக பெண்களிடம் சில வாலிபர்கள் ஆபாசமாக பேசி வருவதாக,  பொதுமக்களிடையே குறிப்பாக பெண்களிடமிருந்து காவல்துறைக்கு புகார்கள் வந்தன. 
 
இதுகுறித்து, கரூர் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) மா.கும்மராஜா தலைமையில் காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 


 

 
அதில், போலி ஆவணங்களை கொண்டு பணத்திற்காக சிம்கார்டுகளை விற்பனை செய்து பொதுமக்களை மிரட்டி பல குற்ற செயல்களில் ஈடுபட்ட கரூர் பண்டரிநாதன் பகுதியை சார்ந்த விக்ரம் (வயது 22), திருக்காம்புலியூர் மோகன்பாபு (வயது 20), ராமானுஜ நகர் சுப்பிரமணி (வயது 25), வேலாயுதம்பாளையம் பகுதியை சார்ந்த சுகன் (வயது 29) ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த சம்பவம் குறித்து கரூர் டி.எஸ்.பி கும்மராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்த போது., பெண்கள் தங்களுடைய பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் அவர்களுடைய உண்மை விவரங்களையும், (ProFile), தொலைபேசி எண்களையும் கணக்கில் வைக்க கூடாது என்றும், இதே போல போலி சிம்கார்டுகள் மூலம் மிஸ்டு கால்களை அழைத்து, பின்பு அவர்கள் மொபைலில் பேசும் போது., ஆபாசமாக பேசினால், உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யுமாறும், பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.