1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (21:59 IST)

கழிவறை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை தீ வைத்து எரித்த கொடூரம்!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதியில் கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த சிறுவனை, விடுதி காப்பாளர் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதியில் வெம்பட்டி பிரவீண் (14) என்ற சிறுவன் உடலில் 70 சதவீத தீக்காயங்களுடன் விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறான்.

சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், விடுதி காப்பாளர் கதுரி வெங்கடேஸ்வரா ராவ் தான், தனது உடலில் தீ வைத்ததாகக் கூறியுள்ளான்.

கழிவறையை சுத்தம் செய்ய மறுத்ததால், பிரவீண் மீது ஆத்திரம் அடைந்த காப்பாளர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

தீயில் கருகிய சிறுவன் தன்னைக் காப்பாற்றுமாறு கதறியும், தான் கூறுவதை செய்வதாக ஒப்புக் கொண்டால்தான் காப்பாற்றுவேன் என்று காப்பாளர் கதுரி வெங்கடேஸ்வரா ராவ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று மாலை 4 மணியளவில் நடந்ததாக, பிரவீணுடன் தங்கியிருக்கும் அவரது சகோதரன் அதுரி மணித் கூறியுள்ளார். மேலும், தன்னையும், தனது சகோதரனையும் உண்மையைச் சொல்லக் கூடாது என்று காப்பாளர் மிரட்டினதாக தெரிவித்துள்ளனர்.