தோட்டத்தில் மேய்ந்த ஆடு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு
நீதிபதியின் தோட்டத்தில் மேய்ந்த குற்றச்சாட்டிற்காக ஆடும் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இருந்து 350 கிமீட்டர் தொலைவில் உள்ளது கோரியா.
இந்தப் பகுதியில், மாவட்ட நீதிபதியின் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தை பரமாரிக்கும் தோட்டக்காரர் ஹேமந்த் ராத்ரே.
இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒரு ஆட்டின் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் பராமரித்துவரும் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த ஆடு ஒன்று அங்கிருந்த செடி, கொடிகளை மேய்ந்தது.
இரும்பு கேட்டை தாவிக்கதித்து தோட்டத்தில் இருந்த செடிகள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை அது நாசப்படுத்தியது. இந்த குற்றத்தை இந்த ஆடு திரும்பத் திரும்ப செய்துள்ளது.
இது குறித்து பல முறை அந்த ஆட்டின் உரிமையாளர் அப்துல் ஹசனிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் ஆட்டை இந்த தோட்டத்திற்கு வராமல் நிறுத்தவில்லை.
எனவே அந்த ஆட்டின் மீதும், ஆட்டின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில், அந்த ஆடும், ஆட்டின் உரிமையாளர் அப்துல் ஹசனும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திக்கு கொண்டுவரப்பட்டனர்.
பின்னர் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக 427, 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த ஆடும் ஆட்டின் உரிமையாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வினோத வழக்கை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.