வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது....?

சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்து கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஆரம்ப கட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டறிவது கடினம். டெங்குவை பரப்பும் கொசு கடித்த நான்கு முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல்  வெளிப்படும்.
* டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவை தாண்டிவிடும். இத்தகைய அதிக வெப்பநிலை அளவை கட்டுப்படுத்த மருந்துகளை  சாப்பிடுவதை தவிர முழுமையாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதும் இன்றியமையாதது.

* ரத்த  பரிசோதனை மேற்கொண்டு ரத்த அணுக்களின் அளவு போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டியது அவசியமானது.
 
* டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படும். அப்படி வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் கண்  பகுதியில் குளிர்ச்சித் தன்மை நிலவும். காய்ச்சலை காட்டிலும் தலைவலி தீவிரமாக இருந்தால் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி.
 
* உடல்வலியும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிதான். ஆரம்பத்தில் மூட்டுகள், தசை நாண்கள், எலும்பு பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும்.  டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தசைகளில் வலி அதிகரிக்கும்.
 
* டெங்கு காய்ச்சலுக்கு பிந்தைய அறிகுறியாக நாள்பட்ட மூட்டு வலி உண்டாகும். இந்த காய்ச்சலின்போது உடல் வலி அதிகமாக இருப்பதற்கு  உடலில் வைட்டமின்கள், தாதுக்கள் குறைவதே காரணமாகும். ஆதலால் டெங்கு பாதிப்புக்குள்ளாகுபவர்கள் வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்து  நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
 
* டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக சருமத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உருவாகும். சில சமயத்தில் அதிலிருந்து ரத்தம் வழியும். இந்த தடிப்புகள் காய்ச்சல் உருவான ஓரிரு நாட்களில் வெளிப்படும். அப்போது நோயாளிகளின் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  சருமமும் வெளிர் நிறத்திற்கு மாறும்.
 
* காய்ச்சல் குறைய தொடங்கும்போதும் தடிப்புகள் உருவாகும். இவற்றை குணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் இல்லை.  டாக்டர்களிடம் ஆலோசித்து மாய்ச்சுரைசிங் கிரீம்களை பயன்படுத்தலாம்.
 
* டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் வீட்டின் உட்புற பகுதிகள், வீட்டை சுற்றியுள்ள நீர் நிலைகளில்தான் இனப்பெருக்கம் செய்யும்.
 
* வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு கடிப்பதை தவிர்க்க உடலை முழுவதும் மூடும் ஆடைகளை அணிய வேண்டும். கொசுக்களை விரட்டும் நிவாரணிகளையும் பயன்படுத்தலாம்.
 
* படுக்கை அறையில் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது. பகலில் தூங்குவதாக இருந்தாலும் கொசு வலையை பயன்படுத்த  வேண்டும்.