இந்திய கிரிக்கெட் வாரியத்தை சுத்தம் செய்வதே முதல் பணி - புதிய தலைவர் மனோகர்
இரண்டு மாதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சுத்தம் செய்வேன் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூரை சேர்ந்த ஷசாங் மனோகர் தற்போது இரண்டாவது முறையாக கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகிறார்.
இதற்கு முன்னதாக, 2008ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலைவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் “என்னுடைய முதல் நடவடிக்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதுள்ள தவறான பிம்பத்தை மாற்றி, ரசிகர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவது தான்.
என்னுடைய திட்டங்களை அமுல்படுத்தி கிரிக்கெட் வாரியத்தை தூய்மைப்படுத்த இரண்டு மாதம் அவகாசம் கேட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்கு பிறகு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.