1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:18 IST)

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் திட்டம்?? – பலப்படுத்தபடும் பாதுகாப்பு

இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்காணித்து வருவதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் அநாமதேய இ-மெயில் ஒன்று வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கடந்த இரண்டு வார காலமாக வெஸ்ட் இன்டீஸுடன் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளை விளையாடி அபார வெற்றி பெற்றது. மீண்டும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் ஆகஸ்டு 22 முதல் ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் மேல் தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதை அவர்கள் ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ இருவருக்கும் அனுப்பியுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த மின்னஞ்சலில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்காணித்து வருவதாகவும் அவர்கள் மேல் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்த மின்னஞ்சல் குறித்து ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம் அது போலியானது என கூறியுள்ளது. எனினும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தை முன்கூட்டியே ஆண்டிகுவா அரசுக்கும் தெரியப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

என்னதான் போலியான மிரட்டல் என்றாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இந்த சம்பவம் சிறிதளவு பதட்டப்படுத்தியுள்ளது.