இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் தமது பிடியிலிருந்த யாசிடி இனத்தவர் 200 பேரை விடுவித்துள்ளதாக வடக்கு இராக்கில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருமே முதியவர்களாகவோ அல்லது நோயுற்றவர்களாகவோ இருப்பதாகத் தெரியவருகிறது. ஜனவரி மாதத்திலும் தம்மால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்களை அந்தத் தீவிரவாதிகள் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய அரசு அமைப்பினர் யாசிடி இன மக்கள் வசித்துவந்த கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பலநூற்றுக் கணக்கான யாசிடி மக்களை கொன்றொழித்த இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் அம்மக்களின் சமய நம்பிக்கைகள் தொடர்பில் வெறுப்பு கொண்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான யாசிடி மக்கள் தற்போதும் இஸ்லாமிய அமைப்பினரால் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெண்களும் சிறுமிகளும் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்.