ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:45 IST)

ராஜபக்சே கட்சி அபார வெற்றி: 145 இடங்களை கைப்பற்றியது!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
 
இலங்கையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது என்பதும் கொரோனா பரபரப்பையும் மீறி பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே. கொரோனா  வைரஸ் பாதிப்பு காரணமாக வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களிக்கவேண்டும் என்றும் இலங்கை அரசு தெரிவித்து இருந்தது
 
இந்த தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜன பெரமுன கட்சி, சஜித் பிரேமதாஸவின் மக்கள் சக்தி கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சம்பந்தன் அவர்களின் தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டதால் 4 முனை போட்டி ஏற்பட்டது 
 
இந்த நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல்கட்ட முன்னிலை நிலவரத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த ராஜபக்சே கட்சி வாக்கு எண்ணிக்கை முடிவில் 145 இடங்களிஅ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
 
சற்றுமுன் வெளியான செய்தியின்படி இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது