வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (18:21 IST)

மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்ற ராஜபக்‌சே முயற்சி - சந்திரிகா குமாரதுங்கா குற்றச்சாட்டு

ராஜபக்சே மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
 
பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்திரிகா குமாரதுங்கா, "ராணுவ வீரர்கள்தான் இலங்கையில் இன்று ஒற்றுமையான சூழலினை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். மூன்று இன மக்களின் ஒற்றுமையினை வென்றெடுக்க நாட்டிற்கான உயர்ந்த தியாகங்கள் செய்தவர்கள் அவர்கள்.
 
பிள்ளைகளை இழந்து தாய்மார்கள் படும் துயரங்கள் கொடுமையானது. நாட்டிற்காக தமது உயிரினை மாய்த்த ராணுவ வீரர்களின் பெற்றோர்கள் வேதனையடைவதையும் அதேபோல் நாட்டிற்காக பிள்ளைகளை பெற்றெடுத்ததை நினைத்து பெருமையும் அடையவேண்டும்.
 
கடந்த காலத்தில் போர் வெற்றியினை ஒரு சிலர் அல்லது ஒரு தனி நபர் மட்டுமே உரிமை கொண்டாடிக் கொண்டிந்ததையும், ஒரு குடும்பம் மட்டும் நன்மையடைந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
 
இன்று அவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக்கொள்ள பெரிய சதித்திட்டம் நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.