1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (11:53 IST)

ராஜபக்சே உதவியால் ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த பான் கீ மூன்: பரபரப்பு தகவல்!

2006ஆம் ஆண்டு நடந்த ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, தென்கொரிய தொழிலதிபர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
அண்மையில் காலமான கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான சங் வொன் ஜொங், பான் கீ மூனை ஐநா பொதுச்செயலாளராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம்  தெரிவித்த தகவலை கொரிய நாளிதழான டாங் ய இல்போ (Dong-A Ilbo) வெளியிட்டிருக்கிறது.
 
தாம் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி, இலங்கை சார்பில் 2006ஆம் ஆண்டு ஐநா பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஜயந்த தனபாலவை போட்டியில் இருந்து விலக வைத்ததுடன், பான் கீ மூனை ஆதரிக்கச் செய்ததாகவும், தென்கொரிய தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
 
தேர்தலின் ஆரம்பக்கட்டத்தில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சுராகியாட் சதிராதை மற்றும் ஐநாவின் உதவிச்செயலராக இருந்த இந்தியாவின் சசி தரூர் ஆகியோருக்குச் சாதகமாக இருந்தது. ஐநா பாதுகாப்புச் சபையில் மூன்று கட்ட வாக்களிப்புகள் நடத்தப்பட்ட போதும் வெற்றியாளரைத் தெரிவு செய்ய முடியவில்லை. இந்தநிலையில், 2006 செப்டம்பர் இறுதியில், ஜயந்த தனபால போட்டியில் இருந்து விலகி, பான் கீ மூனுக்கு ஆதரவளித்ததையடுத்து, அவர் ஐநா பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
இலங்கையின் ஜயந்த தனபால போட்டியில் இருந்து விலகியதையடுத்து, அக்டோபர் 2ஆம் தேதி நடந்த நான்காவது கட்ட வாக்களிப்பில், பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில், 14 நாடுகளின் வாக்குகளை பான் கீ மூன் பெற்றார். ஒரு நாடு வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, 2006 அக்டோபர் 13ஆம் நாள் பான் கீ மூனை ஐநா பொதுச்சபை தெரிவு செய்தது.
 
இலங்கை அதிபருடனான தனது தனிப்பட்ட நெருக்கமே, இதனைச் சாதிக்க உதவியதாக, தனது நண்பர்களிடம், தென்கொரியத் தொழிலதிபர் சங் கூறியுள்ளார். ஜயந்த தனபால வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், பான் கீ மூனுக்கு ஆதரவளிக்கும்படி தான் ராஜபக்சேவிடம் கோரியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த உதவிக்காக பான் கீ மூன் தொழிலதிபர் சங்கிற்கு நன்றி கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.