1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (20:27 IST)

அதிபர் டிரம்புடன் வாக்குவாதம்: சிஎன்என் செய்தியாளருக்கு தற்காலிக தடை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்போடு நடைபெற்ற கடும் வாக்குவாதத்திற்கு பின்னர் சில மணிநேரங்களில் வெள்ளை மாளிகையின் சிஎன்என் செய்தி ஊடக தலைமை செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவின் சான்று ஆவணங்களை வெள்ளை மாளிகை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜிம் அகோஸ்டா கேள்வி எழுப்பியபோது, அவருடைய கைகளில் இருந்த ஒலிவாங்கியை வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவர் பறிக்க முயன்றார்.
 
ஓர் இளம் பெண் மீது அவர் கை போட்டதால் இந்த செய்தியாளரின் நுழைவு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற கீழவையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையை இழந்தாலும், மேலவையில் அதிக தொகுதிகளில் வென்றிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல் பற்றி அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது,
 
மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்கா நோக்கி வரும் தஞ்சம் கோருவோரை விவரிக்க "படையெடுப்பு" என்ற சொல்லை டிரம்ப் பயன்படுத்தியது பற்றி அகோஸ்டா கேள்வி எழுப்பினார்.
 
2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில்போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பான புலனாய்வு பற்றி அகோஸ்டா கேள்விகேட்டபோது, "இது போதும். ஒலிவாங்கியை கீழே வையுங்கள்" என்று டிரம்ப் அவரிடம் கூறினார்.
 
பெண் ஊழியர் ஒருவர் பத்திரிகையாளரிடம் இருந்து ஒலிவாங்கியை பிடுங்க முயன்றார். அகோஸ்டா அவ்வாறு செய்வதை எதிர்த்தார்.
 
"உங்களை வேலை செய்ய நியமித்ததற்கு சிஎன்என் வெட்கப்பட வேண்டும். நீங்கள் முரட்டுத்தனமானவர், பயங்கரமானவர்" என்று கூறிய அதிபர் டிரம்ப், தன்னுடைய செய்தி செயலரிடம் அகோஸ்டா மோசமாக நடந்து கொண்டதாக கூறினார்.
 
அகோஸ்டாவின் செயலை நியாயப்படுத்தி பேசிய இன்னொரு செய்தியாளரிடம், "நான் உங்களுடைய பெரிய ரசிகனும் அல்ல" என்று டிரம்ப் கூறியபோது அங்கு சிப்பலை எழுந்தது.
 
தனது பணியை செய்ய முயலுகின்ற இளம் பெண்ணொருவரின் மீது செய்தியாளார் கைகள் வைத்திருந்ததை வெள்ளை மாளிகை ஒருபோதும் பொறுத்து கொள்ளாது என்று சாண்டர்ஸ் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
இந்த செயல் அருவருப்பானது மட்டுமல்ல, இந்த நிர்வாகத்தில் பணிபுரியும் இளம் பெண்கள் உள்பட அனைவரையும் அவமதிப்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதன் விளைவாக அடுத்த அறிவிப்பு வரும்வரை, இந்த செய்தியாளருக்கு வழங்கப்படுள்ள நுழைவு அனுமதியை (hard pass) ரத்து செய்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.