1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (17:25 IST)

சவுதி அரேபியாவில் 3 பேருக்கு தலை துண்டித்து மரண தண்டனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தலைகள் சீவப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

 
சவூதி அரேபியாவில் அந்நாட்டைச் சேர்ந்த துர்க்கி அல்-டியானி, ஷிரே அல்-ஜினேபி மற்றும் மன்சூர் அல் ரோலி ஆகிய மூவரின் தலைகள் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று பேருக்குமான இந்த தண்டனை புதன்கிழமை மூன்று இடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
இதில் டியானி மற்றும் ஜினேபி ஆகிய இருவரும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். மூன்றாவது நபரான மன்சூர், போதை மருந்து கடத்தலுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த மூவரின் தலைகளை வெட்டி தண்டனைகளை நிறைவேற்றியதன் மூலம், நடப்பாண்டில் தலைகள் வெட்டப்பட்டு தண்டனை அடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
 
மரண தண்டனை குறித்து பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், கடந்த மே மாதத்தில், தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆட்கள் தேவை என்று அரசு சார்பாக விளம்பரம் ஒன்றும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.