வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (21:59 IST)

முடிவுக்கு வந்த அமெரிக்க ஷட் டவுன்...

அமெரிக்க அரசாங்கப் பணிகளுக்கு அடுத்த இரண்டாண்டுகளுக்கு நிதியளிக்கும் நிதிநிலை மசோதாவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டதால் அங்கு நிலவிய நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது.
 
முன்னதாக அந்த மசோதாவுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு சபை உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக முடங்கிப்போன அமெரிக்க அரசாங்கப் பணிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளது.

முன்னதாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மத்திய நிதி காலாவதியாவதற்குள் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
 
ஆனால், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ரேண்ட் பால், செலவினம் தொடர்பான வரம்புகளை பராமரிப்பதில் தான் கொண்டுவந்த திருத்தங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபையில் கோரிக்கை விடுத்த போது மசோதா மீதான விரைவு வாக்கெடுப்பு கனவுகள் தகர்ந்து போனது.
 
கடந்த ஜனவரி மாதம், இதே போன்று ஒரு தோல்வியினால் அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்றைய தினம் (வியாழக்கிழமை), செனட் உறுப்பினர் ரேண்ட் பால் தொடர்ந்து தனது வாக்கை பதிவுசெய்ய தாமதித்து வருவதால், ஒரு சாத்தியமான வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
 
இந்த சமீபத்திய ஒப்பந்தத்தில் செலவினம் தொடர்பான வரம்புகளை 300 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரம்பு அதிகரிப்பிற்கு தான் ஆதரவு தெரிவிக்க முடியாது என்று செனட் உறுப்பினர் பால் வலியுறுத்தியிருந்தார்.