1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (13:37 IST)

இனிமேல் போர் விண்வெளியில்தான்! – அமெரிக்கா அடுத்த கட்டம்!

உலகிலேயே முதன்முறையாக விண்வெளி படையை உருவாக்கி மற்ற நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா.

உலக நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை பாதுகாக்கவும், பிற நாட்டு அச்சுறுத்தலை தடுக்கவும் கப்பற் படை, விமான படை, தரை படை ஆகியவற்றை கொண்டுள்ளன. கடல் மார்க்கமாக இல்லாத சில நாடுகளில் மட்டும் கப்பற் படை இருப்பதில்லை.

அமெரிக்காவில் தரை படை, விமான படை தவிர்த்து அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கென இரண்டு கடற்படைகளும் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா புதிதாக விண்வெளி படையை உருவாக்கியுள்ளது.

இதற்காக 738 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்கு அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ”தற்போது விண்வெளியும் மிகப்பெரும் போர் களமாக மாறி வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பாதுகாக்க விண்வெளி படை முக்கியமானதாகிறது.” என்று கூறியுள்ளார்.

16 ஆயிரம் போர் வீரர்களை கொண்டு உருவாகியுள்ள இந்த விண்வெளி படையில் அதிநவீன ஆயுதங்களும், ஏவுகணைகளும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடுகளுக்கு கடல், நிலம் மூலம் வரும் ஆபத்தை விட விண்வெளியிலிருந்து வரும் ஆபத்துக்கள் யூகிக்க இயலாதவை, தடுக்க முடியாதவை. அமெரிக்காவுக்கு போட்டியாக அதை எதிர்க்கும் நாடுகளும் விண்வெளி படை அமைக்க தொடங்கினால் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போர் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.