செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:50 IST)

உலக சினிமா - Embrace of the Serpent

கொலம்பியாவைச் சேர்ந்த இளம் இயக்குனர் சிரோ குவெரா, 2015-ல் இயக்கிய படம், எம்ப்ரேஸ் ஆஃப் தி செர்பென்ட். இந்தப் படம் கொலம்பியாவின் அமேசான் காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டது.


 
 
அமேசான் காட்டுப்பகுதியில் நிறைய பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தியோடர் என்கிற ஜெர்மன் இனவரைவியல் நிபுணரை நோய்வாய்ப்பட்ட நிலையில் கரமகட் என்ற பழங்குடியிடம் அழைத்து வருகிறார்கள். கரமகட் இளைஞன். அவனது இனத்தில் அவன்தான் கடைசி. மற்றவர்களை வெள்ளையர்கள் கொன்றுவிட்டனர்.
 
தியோடருக்கு முதலில் மருத்துவம் செய்ய கரமகட் மறுக்கிறான். கரமகட்டின் இனத்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தியோடர் சொல்வதையும் அவன் நம்பவில்லை. யக்ருனா என்ற மலர் இருந்தால் மட்டுமே தியோடருக்கு மருத்துவம் பார்க்க முடியும், அந்த மலர்தான் தியோடரை காப்பாற்றும் என கரமகட் கூறுகிறான். என்னுடைய இனத்தவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால் அவர்களிடம் யக்ருனா மலர் இருக்கும் என்பவன், தியோடருடன் செல்ல சம்மதிக்கிறான்.
 
இந்தப் பயணம் படத்தில் பிரதானமாக வருகிறது. கரமகட்டின் இனத்தவர்களை அவன் கடைசியாக கண்டுபிடிக்கிறான். அவர்கள் பழங்குடி தன்மையை மறந்தவர்களாக யக்ருனா மலருக்கான மரியாதை தராதவர்களாக இருக்கிறார்கள். கரமகட் கோபத்தில் அனைத்து யக்ருனா செடிகளையும் தீ வைத்து எறித்துவிடுகிறான். தியோடர் யக்ருனா மலர் கிடைக்காமல் திரும்ப வேண்டியதாகிறது.
 
தியோடரின் குறிப்புகளை கொண்ட புத்தகத்தை படிக்கும் அமெரிக்க தாவரவியலாளர் ரிச்சர்ட் இவன்ஸ் என்பவர் கரமகட்டை தேடி காட்டுக்கு வருகிறார். இப்போது கரமகட்டுக்கு வயதாகி இருக்கிறது. தான் தேடும் யக்ருனா மலர் குறித்து தியோடரின் குறிப்பில் இருந்ததாகவும், அதில் கரமகட்டை பற்றி தெரிந்து கொண்டு அவரை தேடி வந்ததாகவும் ரிச்சர்ட் கூறுகிறார். 40 வருடங்களுக்கு முன் தியோடருடன் பயணித்த அதே வழித்தடத்தில் கரமகட் ரிச்சர்டுடன் மீண்டும் பயணிக்கிறார்.
 
இந்த இரு பயணங்கள்தான் இந்தப் படத்தின் பிரதான அம்சங்கள். பழங்குடிகளை மதம் மாற்றும் பாதிரியார், வெள்ளைக்காரர்கள் அமைத்த ரப்பர் தோட்டத்தில் அடிமைகளாக்கப்பட்ட பழங்குடிகள் என பல்வேறு அரசியலை இந்தப் படம் கூறிச் செல்கிறது.
 
முழுக்க அமேசான் காட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றது. சிரோ குவெரா இந்தப் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்திருந்தார். இந்தப் படத்தின் சிறப்புகளில் இந்த கறுப்பு வெள்ளை தேர்வும் ஒன்று எனக்கூறலாம்.