1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By K.‌P. Vidyadaran
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (15:22 IST)

ரிஷபம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

அடிமனசில் தோன்றுவதை அப்படியே பேசும் நீங்கள், உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டீர்கள். குரு 3-ல் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடைய ராசிக்கு 11-ம் வீட்டிலே கேது அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட முடிக்கும் சாமர்த்தியம் கிடைக்கும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.  

வெளிமாநிலத்தில், அயல்நாட்டிலிருப்பவர்களின் தொடர்பால் முன்னேறுவீர்கள். சூரியன் இப்போது 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனஇறுக்கங்கள், அலைச்சல், சோர்வு குறையும். ஆனால் சூரியன் சனியுடன் சேர்வதால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். அரசு காரியங்கள் சற்றே தாமதமாகி முடியும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பிள்ளைகளும் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால் புதன் 2-ந் தேதி முதல் 6-ம் வீட்டில் சென்று மறைவதால் பிள்ளைகளின் உத்யோகம், திருமணம் குறித்த கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் ராசிநாதனான சுக்ரன் 20-ந் தேதி முதல் 6-ல் மறைவதால் முதுகு வலி, தலை வலி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். கன்னிப் பெண்களே! அலர்ஜி, இன்பெக்ஷன் வந்துப் போகும். நண்பர்களுடன் மோதல் வரும்.

யாரை நம்புவது, யார் நல்லவர்கள், யார் அல்லாதவர்கள் என்ற குழப்பமும், தடுமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். உணவு, வாகனம், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்ளும் மாதமிது.