வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2014 (11:42 IST)

அவங்க ஒண்ணு சேர்ந்திட்டாங்க...

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியான கௌதம் வாசுதேவ மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைகிறார்கள். சந்தேகத்துடன் பேசப்பட்டு வந்த இந்த சந்தோஷ செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மின்னலே படத்தில் கௌதம் - ஹாரிஸ் இருவரும் சேர்ந்தே அறிமுகமானார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் ஹாரிஸுக்கு அழிக்க முடியாத முகவரியாக மாறியது. குறிப்பாக வசீகரா பாடல். இன்றும் அப்பாடல் தனித்துவம் இழக்காமல் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
 
அதன் பிறகு கௌதமின் ஒவ்வொரு படத்தையும் ஹாரிஸின் இசை அலங்கரித்தது என்றால் வார்த்தைகளால் வண்ணம் பூசியவர் கவிஞர் தாமரை. நெஞ்சுக்குள் மாமழையாக பெய்த இந்தக் கூட்டணி சட்டென்று மாறிய வானிலையால் எதிர்பாராமல் உடைந்தது. 
நெருங்கி நண்பரான கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தனக்குப் பதில் ரஹ்மானை பயன்படுத்துவதை சொல்லவில்லை என ஹாரிஸுக்கு வருத்தம். இவ்வளவுதானா நமது நட்பு என்று நட்புக்கான வாசலை ஹாரிஸ் அடைக்க, கௌதமும் ரஹ்மான் இருக்கும் பலத்தில் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நட்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்...?
 
ஹாரிஸுடன் மீண்டும் பணிபுரிய கௌதம் பலமுறை முயன்றார். தன்மீதே தவறு என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். கடைசியில் ஹாரிஸின் மனம் கனிந்தது. ஸ்ரீ சத்ய சாய் தயாரிப்பில் கௌதம் - அஜீத் இணையும் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் ஒத்துக் கொண்டார். பாடல்கள் எழுதுவது தாமரை என்றும் சொல்லப்படுகிறது. 
 
இந்த முக்கூட்டணி மீண்டும் சரித்திரம் படைக்கட்டும்.