1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (10:33 IST)

விடப்போவதில்லை - பேனாவும் கானாவும் கூடவே விஷாலும்

வருகிற 30 -ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழுவை கூட்டி நடிகர் விஷாலை சங்கத்தைவிட்டே நீக்குவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். நடிகர் சங்க கட்டட விவகாரத்தை விஷால் முன்னெடுத்ததற்காகவும், தன்னையும் பிற நடிகர்களையும் ராதாரவி, காளை ஆகியோர் நாய் என்று பொது இடத்தில் திட்டியதற்கு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதற்காகவும் விஷால் மீது இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளனர். 
 
தேனெடுத்தவன் ஒருவன் தேனீ கொட்டியது இன்னொருவன் என்ற கதையாக நடிகர் சங்கம் நடந்து கொள்ளும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை விஷால் அப்படியே விட்டுவிடுவதாக இல்லை.
 
கோவை பத்திரிகையாளர்கள் நடத்திய பேனாவும் கானாவும் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொண்டவர், நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக மீண்டும் முஷ்டி தூக்கினார்.
 
நான் என்ன தவறு செய்தேன் என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும், நானே சங்கத்தைவிட்டு விலகுகிறேன். தப்பு செய்த ராதாரவி, காளையைதான் சங்கத்தைவிட்டு நீக்க வேண்டும். அடுத்த வருடம் நடக்கிற சங்க தேர்தலில் கண்டிப்பாக நான் நிற்பேன். இளம் நடிகர்கள் பொறுப்புக்கு வந்து சங்கத்தை திறம்பட வழிநடத்த ஆர்வமாக உள்ளனர் என்றார் விஷால்.
 
30 -ஆம் தேதி செயற்குழு எடுக்கும் தீர்மானத்தைப் பொறுத்து விஷாலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.