1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:33 IST)

“காயங்களுக்கு பெருநன்றி” - பிரசன்னா

‘வெற்றியையும், தோல்வியையும் எதிர்கொள்ளப் பழக்கப்படுத்திய காயங்களுக்குப் பெருநன்றி’ எனத் தெரிவித்துள்ளார்  பிரசன்னா.
பிரசன்னா வில்லனாக நடித்த ‘திருட்டுப்பயலே 2’ இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது. இது பிரசன்னாவுக்கு 25வது  படம். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறார் பிரசன்னா.
 
இந்நிலையில், அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும்  பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘திருட்டுப்பயலே 2’. அதேசமயம், தெலுங்கிலும் நான் நடித்த ‘ஜவான்’ படம்  வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
 
மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், சக நடிகர் - நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன். குறிப்பாக, ‘5ஸ்டார்’ படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து, என் 25வது படத்திலும் அழுத்தமான  பாத்திரம் தந்து பெரும் பாராட்டும், வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது  ஒருநாளும் போகாதென் வாழ்நாளில்.
 
எனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து, நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்த பத்திரிக்கை,  தொலைக்காட்சி, வானொலி, இணையதள ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுக்கள் பெரும் உந்து சக்தி  எனக்கு. சில நேரங்களில் சில ஊடகங்கள் என்னைக் காயப்படுத்தியதும் உண்டு. அக்காயங்கள் என்னை மேலும் வலுவுடன்  போராடவே உதவியுள்ளது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் எதிர்கொள்ள பழக்கப்படுத்தியுள்ள அக்காயங்களுக்கும்  பெருநன்றி.
 
15 ஆண்டுகால இப்பயணம், பூ விரித்து மென்மையான பாதையில் அமைந்திருக்கவில்லை. கரடுமுரடான அப்பாதையில் உற்ற  துணை ஒன்று என் படங்களைப் பார்த்து ரசித்துப் பாராட்டி, எப்போதும் மனதிலே நம்பிக்கையை விதைத்துக்கொண்டே இருந்த  ரசிகர்கள்தான் அந்தத் துணை. ஆண்டுகள்  கடந்தும் என் படங்களை நினைவுகூர்ந்து பாராட்டி ஒவ்வொரு புது முயற்சியிலும்  தோள்தட்டி , எனக்கான உயரம் பெரிதென்றும் அதற்கான அங்கீகாரம் கிடைக்குமென்றும் எப்போதும்  சொல்லிச்சொல்லி துணை  நின்றிருக்கும் என் ரசிகர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் இதயத்தின் அடித்தளத்தினின்று.
 
எனக்காக  எப்போதும் பிரார்த்திக்கும் அம்மா, அப்பா, தம்பிக்கும் , யாரையும்விட என்னை முழுமுற்றிலும் நம்பி என் போராட்டங்களிலெல்லாம் கேள்வியின்றி துணை நின்று பலம்சேர்த்த அன்பு மனைவிக்கும், குடும்பத்தாருக்கும், என் நலனில் எப்போதும் அக்கறையுள்ள நண்பர்களுக்கும் நன்றி சொல்லி தீராது’ என கூறப்பட்டுள்ளது.